சனி, 7 பிப்ரவரி, 2009

இறைவன் அடி (திருக்குறள் 3, 4, 10, 208, 544, 610, 1120, 1279)


நம் அடி நிலத்தில் நிற்கும். இறைவன் அடி எங்கே நிற்கும்? அவரர் மனத்தில் தானே நிற்கும். அதைத்தானே வள்ளுவர் மலர்மிசை ஏகினான் என்கிறார். மனந்தானே நினைத்தபோதெல்லாம், நினைக்கிறபடியெல்லாம் மலர்கிறது. பின் ஏன் இறைவனை வெளியில் தேடுகிறோம். வெளியில் வணங்குகிறோம். (3, 4, 10)

நம் உடலின் நிழல் நம்மைத் தொடர்வது போல, நாம் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும் இறைவன் நம் மனத்தைத் தொடர்கிறான் (208)

அரசன் குடிமக்களைத் தழுவி ஆட்சி புரிகிறான். குடிமக்கள் அவனது அடியைத் தழுவி நிற்கின்றனர். இறைவனும் அப்படித்தான். (544)

நம் மனத்தில் அவன் அடிவைத்து நடக்கிறான் (610)

இறைவன் அடி அனிச்சமலர் போன்றது. நம் மனம் அடுத்தவர் மனத்தைத் துன்புறுத்த நினைத்தால் அவன் அடி நோகும் (1120)

அவள் கழலும் தன் வளையலைப் பார்த்தாள். மெலியும் தோள்களைப் பார்த்தாள். தன் அடியையும், அவன் அடியையும் பார்த்தாள். இந்தப் பார்வையால் அவள் என்ன சொன்னாள். இணைந்தேன், இணைவோம் என்றாள். (1279) நாமும் இறைவனோடு இப்படித்தான் இளகி இணையவேண்டும்.

கருத்துகள் இல்லை: